×

கலைஞர் நூற்றாண்டு விழா ஜூன் 3ல் தொடக்கம் திருவாரூரில் பிரமாண்ட மாநாடு: தேசிய தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நாடே திரும்பி பார்க்கும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது, திருவாரூரில் ஜூன் 3ம் தேதி பிரமாண்டமான மாநாடு நடத்துவது என்றும், திமுகவில் மேலும் ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், விழாவில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் வகையில் அவர்களையும் விழாவுக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 75 மாவட்ட திமுக செயலாளர்கள், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை, இந்த ஆண்டு பிரமாண்டமாக கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விரிவாகவும் ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், பல்லாயிரம் ஆண்டுப் பழந்தமிழின் முத்தமிழ் அறிஞர், இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த சிற்பி, பல முறை இந்திய பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர், நம்மை ஆளாக்கிய தலைவர், நமக்கு உயிரானவர், இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு வரும் ஜூன் 3ம் நாள், நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

நம்மை நமக்கே அடையாளம் காட்டிய கலைஞர் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள், திருக்குவளையில் பிறந்து தரணியையே ஆட்சி செலுத்தும் தலைவராக வளர்ந்தார். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் நாள் இயற்கை நம்மிடம் இருந்து அவரைப் பிரித்து, வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தாலாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் அவரை ஓய்வெடுக்க வைத்தது. அன்று முதல் கலைஞரின் கனவுகளை நிறைவேற்ற தினமும் நாம் பணியாற்றி வருகிறோம். மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, 2018ம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி முகத்தைத் தொட்டோம்.

6வது முறையாக தாய்த் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை, தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு வழங்கினர். கலைஞர் வார்ப்பாக மட்டுமல்ல, கலைஞராகவே செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். ‘சொன்னதைச் செய் - செய்வதைச் சொல்’ என்று இன்றும் கலைஞரின் குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதால் தான், தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டி வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்திய நாட்டில் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உச்சிக்கு கொண்டு சென்று மகுடத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார்.

திமுக அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
திமுகவும், திமுக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில், நம்மை எல்லாம் ஆளாக்கிய கலைஞரின் நூற்றாண்டு விழா வருவது மிகமிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும். கலைஞர், அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த நம் கட்சியை, மேலும் வலிமைப்படுத்த ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற மாபெரும் முன்னெடுப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது. துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரசாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைத்திடுவோம்.

கலைஞரை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் ஜூன் 3ம்தேதி அன்று, திமுக தலைமையால் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு ‘கலைஞர் கோட்டம்’ வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை, கட்டிடங்கள் என்று சொல்வதை விட தமிழ்நாட்டிற்கும்- இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக ‘கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை’ அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் ஜூன் 3ம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டு காலம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ் மொழிக் காப்பு, தமிழின உரிமைகள், தமிழ்நாட்டின் உயர்வு, திராவிடச் சுயமரியாதை, மாநில சுயாட்சி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு - ஒடுக்கப்பட்டோர் நலன் சமூக நீதி-பெண்ணுரிமை, இலக்கிய வளர்ச்சி, கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை கலைஞர் ஆற்றி இருக்கிறார். எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே கலைஞர் ஒப்படைத்துக் கொண்டாரோ அந்த நோக்கத்துக்காக கலைஞர் வழித்தடத்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Artist Century Festival , Artist Centenary Commences Grand Conference at Tiruvarur on June 3: National Leaders Participate
× RELATED கங்கைகொண்ட சோழபுரத்தில் கல்லூரி...