சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.21,19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 03.03.2023 முதல் 16.03.2023 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.10,77,600/- அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.8,79,900/- அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.1,61,500/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் :
வ. எண் மண்டலங்கள் குப்பைகள் கொட்டிய நபர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை (ரூ.) கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை (ரூ.) காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட விவரம் சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை (ரூ.)
1. திருவொற்றியூர் 56,300 54,000 94 8,200
2. மணலி 37,000 23,000 26 5,000
3. மாதவரம் 70,000 30,000 26 10,000
4. தண்டையார்பேட்டை 55,000 40,000 298 12,500
5. இராயபுரம் 86,700 50,000 123 10,000
6. திரு.வி.க.நகர் 51,100 52,500 29 8,000
7. அம்பத்தூர் 79,400 73,900 34 12,000
8. அண்ணாநகர் 80,500 90,000 0 8,300
9. தேனாம்பேட்டை 1,27,300 80,000 26 13,000
10. கோடம்பாக்கம் 66,600 93,500 27 12,000
11. வளசரவாக்கம் 71,200 55,000 19 9,000
12. ஆலந்தூர் 56,500 55,000 28 11,500
13. அடையாறு 83,000 80,000 25 20,000
14. பெருங்குடி 70,000 78,000 32 11,000
15. சோழிங்கநல்லூர் 87,000 25,000 18 11,000
மொத்தம் 10,77,600 8,79,900 805 1,61,500
எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிகக் குப்பைகள் காணப்பட்டால், பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.