திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் எண்ணும் எழுத்தும் - கற்றலை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், லத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் சுபலட்சுமி பாபு தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சகாதேவன், பள்ளியின் தலைமையாசிரியர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது, இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்களது வீடுகளில் இருந்து கம்பு, கேழ்வரகு, சோளம், திணை ஆகியவற்றால் சமைத்த கூழ், கலி, கஞ்சி, தோசை, இட்லி உள்ளிட்ட உணவுகளையும், கடலை மிட்டாய், தேன் மிட்டாய், எள்ளு உருண்டை உள்ளிட்ட மிட்டாய்களும், கீரை, சிறுதானிய பழங்கள் ஆகியவைகளை கொண்டு வந்து பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் உணவுத்திருவிழா கண்காட்சி நடத்தினர்.
இதனை, ஒன்றியக்குழு தலைவர் சுபலட்சுமி பாபு பார்வையிட்டு மாணவ - மாணவிகளை பாராட்டினார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் இயற்கை உணவு, பழங்கள், காய்கறிகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கண்காட்சியில் கலந்து கொண்டவர்களிடம் விளக்கம் அளித்தனர்.