சென்னை: நிதி ஆயோக் துணைத் தலைவர் மற்றும் நிதி ஆயோக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (மார்ச் 21ம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலினை, நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட குழு சந்தித்து, அந்த அமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் ஆகியன குறித்து கலந்தாலோசித்தனர். இச்சந்திப்பின்போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சிறப்புச் செயலாளர் ராஜ்சேகர், மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் சுதா, நிதி ஆயோக் ஆலோசகர் பார்த்தசாரதி ரெட்டி, துணைத் தலைவரின் தனிச்செயலர் முத்துகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.