சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை இவ்வருடம் 4 லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக இன்று உலக தண்ணீர் தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கான இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜல்சக்தி இயக்கத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள கருப்பொருள், “குடிநீருக்கான ஆதாரத்தினை நிலைப்படுத்துதல்’ ஆகும். உலக தண்ணீர் தினத்தில் நடைபெறும் கிராம சபையில் ஒவ்வொருவரும் நீரினை பாதுகாத்தல், பயன்பாட்டினை குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழைநீரினை சேகரித்தல் என்கிற விழிப்புணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும். ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், அதற்கான மக்கள் பங்கேற்புத் தொகை செலுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அது குறித்த பொருளும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக இணையதள வசதி மற்றும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம். கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை நடைபெறுவதை மாவட்ட அளவில், மாநில அளவில் கண்காணித்திட “நம்ம கிராம சபை எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டும்.