திருமலை : ஆந்திரா கடப்பாவில் 23 செம்மரக்கட்டைகளை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து கார் மற்றும் பைக்கை அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் செம்மரக்கடத்தல் அதிரடிப்படை எஸ்பி சக்கரவர்த்தி உத்தரவின்படி, ஆர்.ஐ. சிரஞ்சீவி தலைமையிலான ஆர்.எஸ்.ஐ ராகவேந்திரா குழுவினர் கடப்பா மாவட்டம் பொருமாமில்லா வனப்பகுதியில் உள்ள தெக்குரு பேட்டா வழியாக காவலக்குண்ட்லா பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது கொம்மினேனி ரஸ்தா இடதுபுறத்தில் ஒரு காரும், பைக்கும் நின்று கொண்டிருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சிலர் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது செம்மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவர்களில் பொருமாமில்லா நகரைச் சேர்ந்த பாலகிரி நாகார்ஜுனா(32), பெட்டெட்டி நாகராஜு(35), குஜ்ஜுலா வெங்கடேஷ்வர்லு (42), சீனமாலா வெங்கடையா (62), புலிவேந்துவைச் சேர்ந்த நீரெட்டுல பிரகாஷ் (20) ஆகிய 5 கடத்தல்காரர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 23 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி அதிரடிப்படை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா விசாரணை நடத்தி வருகிறார்.