திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிபோதையில் கண்ணாடியை உடைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜி(28). இவருடைய தாயார் பெயர் பவானி(48). கடந்த 15ம் தேதி உடல் நலக்கோளாறு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு, பவானி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் தன்னுடைய அம்மாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, மது போதையில் விஜி நேற்றுமுன் தினம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் 3வது தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை அவர் உடைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார், விஜியை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்து வருகின்றனர்.