பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் தின பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழகப் பேச்சாளர் ஈரோடு இறைவன், எம்எல்ஏக்கள் கே.பி.சங்கர், கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி, பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பகலவன், கதிரவன், பாஸ்கர் சுந்தரம், அன்புவாணன், செல்வசேகரன், ரவிக்குமார், தேசராணி தேசப்பன், தமின்சா, ரமேஷ், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.