சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டு பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம், சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும். இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும். இதற்கு, பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன், சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை விரிவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.