சென்னை: திமுக மாணவர் அணி பொறுப்புக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து,அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் கட்சி ரீதியான 72 மாவட்டங்களுக்கும், புதுவை மாநிலத்திற்கும், கோவை, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நான்கு இடங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நடைபெற்ற நேர்காணல்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையினால் மாவட்ட தலைமையிடமோ, திமுக தலைமையிடமோ மனு செய்ய முடியாமல் தவறவிட்டவர்கள் மற்றும் நேர்காணல்களில் கலந்து கொள்ள தவறவிட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், திமுக மாணவர் அணியில் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்கள், நேரடியாக மனு செய்து நேர்காணலில் பங்கேற்க ஏதுவாக, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் வரும் 26ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல், சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள, கட்சி உணர்வுள்ள, துடிப்புமிக்க மாணவர் அணி செயல்பாட்டாளர்கள், கல்லூரி மாணவர்கள் (மாணவிகளும்) நேர்காணலில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். நேர்காணலில் பங்கேற்க வரும் போது, தவறாமல் கல்வி, பிறப்பு, வயது சான்றிதழ், அசல் மற்றும் நகல் எடுத்து வரவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.