திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நேற்று 50 கிலோ பழங்கள் மற்றும் 100 கிலோ கண்கவர் பூக்களால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை காண்பதற்காகவும் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்வதற்காகவும் விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்திருந்தனர். திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய மாரியம்மன் கோவில். இக்கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பெரிய மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மன் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று கோவில் வளாகம் பல்வேறு பழ வகைகளாலும் கண் கவர் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் கர்ப்ப கிரகம் நுழைவாயில் இரண்டு புறமும் பூக்களாலும் கோயில் வளாகத்தில் பல்வேறு பகுதிகள் பல்வேறு வகையான பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தர்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, மாதுளை உள்ளிட்ட சுமார் 50 கிலோ பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பூக்களைப் பொறுத்தவரை ரோஜா, மல்லிகை, தாமரை, முல்லை, பிச்சி மற்றும் அலங்கார பூக்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கோயில் ஊழியர் ஒருவர் கூறுகையில், கோயில் வளாகத்தில் முதல்முறையாக பல்வேறு வகைகளாலும் கண்கவர் அலங்கார பூக்களை கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தது காண்போர் கண்களை கவரும் வகையில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலில் செய்யப்பட்டுள்ள அலங்காரத்தை காண்பதற்காகவும் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்வதற்காகவும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது என்றார். கோவிலில் பழ அலங்காரத்திற்கும் பூக்கள் அலங்காரத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, நிர்வாக அதிகாரி சத்யநாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நாளை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.