×

காரியாபட்டி அருகே விஜயநகர பேரரசு கால நடுகல் கண்டெடுப்பு

காரியாபட்டி: காரியாபட்டி அருகே விஜயநகர பேரரசு கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால நடுகல் சிற்பத்தை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்களான ஸ்ரீதர் மற்றும் வரலாற்று துறை உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கண்டெடுத்தனர்.

இதுகுறித்து இவர்கள் கூறியதாவது:
சங்க காலத்தில் இருந்தே போர், விலங்குகளுக்கு எதிரான சண்டை, மக்களுக்காக வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. தற்போது கண்டறியப்பட்ட நடுகல் போரில் ஈடுபட்டு உயர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் இரண்டரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு ஆண் மற்றும் அவரின் மனைவியின் உருவமும், இரண்டு குடுவையும் செதுக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்த துக்கம் காரணமாக உடன்கட்டை ஏறுவதும், சிலர் மறுக்கும் பட்சத்தில் அக்காலங்களில் மதுவை கொடுத்து அவர்களை தீயிலிட்டு சதி எனும் உடன்கட்டை ஏறும் சடங்கை செய்வதும் உண்டு என்றும் கூறுவர்.

அந்த வகையில் இந்த சிற்பத்தில் இரண்டு மது குடுவைகள் இருவரின் கால்களின் இடையில் செதுக்கப்பட்டுள்ளது. இரு திருமேனியிலும் ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வீரனின் வலதுகையில் சிதைந்த நிலையில் ஆயுதம் இடம் பெற்றுள்ளது. பெண்ணின் கையில் மலர் செண்டு காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம். இவ்வாறு கூறினர்.

Tags : Kariyapatti , Cariyapatti, Vijayanagara Empire, Middle Stone Finds
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்