அண்ணாநகர்: அண்ணாநகரில்ரூ.90 லட்சம் செல்வில் புதுப்பிக்கப்பட்டுள்ள டவர் பூங்கா இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை அண்ணா நகரின் மையப்பகுதியில் 15.5 ஏக்கர் பரப்பளவில் டவர் பூங்கா என்று அழைக்கப்படும் டாக்டர் விஸ்வேஸ்வரர் டவர் பார்க் அமைந்துள்ளது. சுமார் 50 வருடத்துக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் மரங்கள், குளம், செடி வகைகள், புல் தரைகள், கலையரங்கம், விளையாட்டு உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு உடற்பயிற்சி செய்யும் வசதியும் உள்ளது. இந்த பூங்கா சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள ‘டவர்’ எனப்படும் கோபுரம் 138 அடி உயரம் மற்றும் 42 மீட்டர் அகலம் உடையது. இது சென்னை மாநகரின் அடையாளமாக உள்ளது. இங்குள்ள கோபுரத்தின் மூலமாக, சென்னையின் மத்திய பகுதியை முழுமையாக பார்வையிட முடியும். கோபுரத்தின் மீது ஏறி காதல் ஜோடிகள் தற்கொலை செய்வது அதிகரித்துவந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு கோபுரத்தின் மேல் ஏற பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பூங்காவில் நடைபயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் டவரை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், திமுக ஆட்சி வந்தபிறகுரூ.90 லட்சம் செலவில் டவர் பூங்கா புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பூங்கா சீரமைப்பு பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப்சிங் பேடி ஆகியோர் கடந்த வாரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்படி பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டவர் பூங்காவை இன்று (20ம் தேதி) மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘அண்ணாநகர் டவர் பூங்காவில் பேட்மிட்டன் மைதானம், நடைபயிற்சிக்கான இடம், குழந்தைகள் விளையாட்டு திடல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் எண்ணத்துக்கு ஏற்ப புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். இந்த டவரின் மேல் பகுதிக்கு சென்று மக்கள் சென்னை அழகை ரசிக்கலாம்,’’ என்றனர்.
