×

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை: ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியில் நீக்கப்பட்டதை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான  எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன்,  வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு நேற்று விசாரித்தார். அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டதாவது: கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று விட்டு, மாலையே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி  மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று மாலை தேர்தல் வேட்புமனு நிறைவு பெற்று விட்டதாக கூறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பது 1.55 கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு எவரும் வகிக்க முடியாது. ஓரிரு நாட்களில் இந்த மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிடுங்கள். அதுவரை தேர்தல் நடத்தக் கூடாது என்று உத்தரவிடுங்கள். இல்லாவிட்டால் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரையே ஒருமனதாக தேர்ந்தெடுத்து விடுவார்கள். உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தொடர்ந்துள்ள வழக்குகளும் காலாவதியாகிவிடும்.
நீதிபதி: தேர்தலுக்கு தடை கோருகிறீர்களா? பி.எஸ்.ராமன்: இடைக்கால உத்தரவாக தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் வாதிடும்போது,  பொதுச்செயலாளர் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு வாரம் வழக்கை தள்ளி வைக்க வேண்டும்.  ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. ஒரு வேட்பு மனு மட்டும்தான் வந்துள்ளது என்று நாளை கூறுவார்கள். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரை வாக்களித்து தேர்ந்தெடுக்க முடியும். சாதாரண சங்கங்களுக்கு தேர்தல் நடந்தால்கூட குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு முன்பு  அறிவிப்பு வெளியிடப்படும். அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட பெரிய கட்சி. இதன் பொதுச்செயலாரை தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு அவசரகதியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதிடும்போது, பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ள அடிப்படை உறுப்பினர்களுக்கு உரிய அவகாசம் வழங்கி நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தராமல் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் நடத்துவது தவறு. எனவே, பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரு பதவி தற்போது சட்டப்படி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற  தீர்ப்புகளை மீறி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, விதிகளுக்கு முரணாக நடைபெறும் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிடும்போது, உள்கட்சி விவகாரத்தில் கோர்ட் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் பணி தொடங்கி விட்டால் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பல தீர்ப்புகளில்  தேர்தல் நடத்தலாம், ஆனால் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட வேண்டும் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் 37 பேர் அவரது  பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தேதி அறிவிப்பில் தவறு ஏதும் இல்லை. தேர்தலுக்கு தடைவிதிக்க கூடாது.

தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இடைக்கால விதிக்க வேண்டும் என்று கோர முடியாது. இது அதிமுக உள்கட்சி விவகாரம் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓபிஎஸ்க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. மனுதார்களுக்கு கட்சியில் ஆதரவு இல்லை. இவர்களுக்கு கட்சியில் ஆதரவு உள்ளதா என்று நிரூபிக்க சொல்லுங்கள். 8 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து  நீக்கப்பட்டவர்கள் கட்சியின் நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும். ஒரே தலைமை வர வேண்டும் என்பது தான் கட்சி உறுப்பினர்களின் கருத்து. பொதுக்குழு தான் கட்சியின் அதிகாரம் கொண்ட மேல் அமைப்பு.

ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் மனுதாரர்கள் செயல்படுகின்றனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கண்டிப்பாக தடைவிதிக்க கூடாது. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை பார்த்தும், ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன. தேர்தல் பணி தொடங்கி விட்டால் நீதிமன்றம் தலையிட கூடாது என்றார். அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக பெரிய கட்சி.

பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு 4 முறை  தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிசன்பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டிலும் இதேபோன்ற நிலை நிலவியது. பலர் வழக்கு போட்டனர். அப்போதும் பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது. இதில் அதிமுக கட்சி விதி தெளிவாக உள்ளது. ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருக்கிணைப்பாளர்களை  1.50 கோடி தொண்டர்கள் உருவாக்கினர். அதை மீற முடியாது என்று கூற முடியாது. பொதுக்குழு சர்வ அதிகாரமும் கொண்டது. தேர்தல் பணி தொடங்கி விட்டால் கோர்ட் உட்கட்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது. உச்ச நீதிமன்ற தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், இதை தெளிவாக கூறியுள்ளது. கட்சியில் உள்ள 2,643 உறுப்பினர்களில் 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசியம். பொதுக்குழு வழக்கு ஏப்ரல் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதில், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் உள்ளது. அதை எதிர்த்த வழக்கு இருக்கும்போது இந்த தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து, ஏப்ரல் 11க்கு பதிலாக மார்ச் 22ல் பிரதான வழக்கு  விசாரிக்கப்படும். தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால், முடிவை அறிவிக்கக் கூடாது. வழக்கு விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும். அதுவரை தேர்தலின் முடிவை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

Tags : AIADMK ,General Secretary ,OPS , Prohibition on announcement of election results for the post of AIADMK General Secretary: High Court sensational verdict in OPS case
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...