நெல்லை: அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து. அதிமுகவுடன் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை எந்தக் கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. காங்கிரஸ், பாஜ, திமுக என அனைவரும் கூட்டணி சேர்ந்துதான் போட்டியிடுகின்றன. பாஜ தனித்துப் போட்டியிடும் என அண்ணாமலை கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து. அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதுதான் இறுதி முடிவு. கருத்துக் கூற எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. உங்களுக்கு கேள்வி கேட்க சுதந்திரம் இருக்கிறது. எனக்கு பதில் சொல்ல சுதந்திரம் இருக்கிறது. அதிமுகவில் ஆதிராஜாராம் கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து.
எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளராக தேர்வாகிறார் என்பது பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் பொதுச் செயலாளர் ஆவார். ஒரு கட்சி என்றால் பொதுச் செயலாளர் வந்துதானே ஆக வேண்டும். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். பாஜவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நயினார் நாகேந்திரன் கூட அதிருப்தியில் இருப்பதாக கூறியிருப்பது குறித்து கேட்கிறீர்கள். எனது கருத்தைத் நான் தான் பிரதிபலிக்க முடியும். வேறு யாரும் பிரதிபலிக்க முடியாது. நெல்லை மாநகராட்சியில் எல்லாப் பணிகளும் நடைபெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். அதிமுகவுடன் கூட்டணி என்றால் பாஜ மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து என்று கூறியிருப்பது, பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.