நெல்லை: சாதி, சமயம் கடந்து எல்லோரும் சமம் என்ற சமூகநீதி காக்கும் ஆட்சி, தமிழ்நாட்டில் நடப்பதாக நெல்லையில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் விழா, பாளை. நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், நெல்லை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 105 பெண்களுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தங்கம், ரூ.48 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.95 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவித் தொகை வழங்கி சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: பெண்களுக்கு கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர் முக்கிய காரணங்களாக இருந்தனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள், மேயர், துணை மேயர் போன்ற பதவிகளில் பெண்கள் அமர்வதற்கு வித்திட்டது, திராவிட இயக்கம். மறைந்த தலைவர் கலைஞர், பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் பெண்கள் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு பிளஸ்2 என கல்வி அறிவு பெற்றனர்.
இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதனால்தான் அகில இந்திய அளவில் உயர்கல்வி படித்த பெண்கள் சதவீதம் 34 சதவீதமாக இருந்த போதிலும், தமிழகத்தில் 52 சதவீதமாக உள்ளது. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டம் பெற்ற பெண், இங்கு வந்து வழக்குத் தொடுத்து தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளார். சாதி, சமயம் கடந்து எல்லோரும் சமம் என்று சமூகநீதி காக்கும் ஆட்சி, தமிழ்நாட்டில் நடக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் பேச்சியம்மாள், சுந்தர், நித்ய பாலையா, மாநகர துணை செயலாளர் பிரபு பாண்டியன், வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், ஒன்றிய திமுக செயலாளர்கள் ராதாபுரம் ஜோசப் பெல்சி, களக்காடு பி.சி.ராஜன், கால்வாய் துரைப்பாண்டியன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.