முத்துப்பேட்டை: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கண்டுக்கொள்ளாத அலையாத்தி காடுகளுக்கு செல்லும் லகூன் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட, முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும்.
இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறத்தவறுவதில்லை. அந்த அளவிற்கு ஒற்றுமொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொக்க பூமியாக இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த அலையாத்திக்காட்டிற்கு முத்துப்பேட்டையிலிருந்து ஆசாத்நகர் கோரையாறு பாலத்தை கடந்து தொடரும் ஜாம்புவானோடை சென்று அங்கிருந்து லகூன் செல்லும் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலையானது, ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் தர்மகோயில் தொடர்ச்சியாக சென்று லகூன் மற்றும் அலையாத்திக்காட்டு செல்லும் புதிய படகு துறை வரையிலான சுமார் 5கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை போட்டு சுமார் 12வருடங்களுக்கு மேலாகிறது. அப்போதே இந்த சாலை முறையாக போடாததால், அடுத்த ஆண்டுகளில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமாகியது. பின்னர் ஆண்டுகள் கடந்ததால், தற்போது இந்த சாலை நெடுவெங்கும் ஜல்லிகள் பெயர்ந்து சேதமாகி மக்கள் பயன்படுத்த முடியாதளவில் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் பல பகுதியில் சாலை பயன்படுத்த முடியாதளவில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் காட்சியளிகிறது.
மேலும் சாலை இருபுறமும் கருவை மரங்கள் படர்ந்துள்ளது. இதனால் நடந்து செல்லவும் வாகனங்களில் மக்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. இரவில் நடமாட மக்கள் தயங்கி வருகின்றனர். அதனால் அலையாத்திகாடு மற்றும் லகூன் பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அவ்வழியில் வசிக்கும் மக்கள் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதேபோல அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை மற்றும் தொலைதூரம் செல்லவும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் தற்போதைய அரசு இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.