சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் நரிக்குறவன், குருவிக்காரன் என்றே சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்ததது.
அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு அரசின் கருத்துருவான ‘‘நரிக்குறவன், குருவிக்காரன்’’ சமூகங்களை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37வது இனமாக சேர்த்து ஒன்றிய அரசு அரசிதழ் வெளியிட்டது. அதற்கேற்ப, தமிழ்நாடு அரசும் நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் சமூகத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான அரசாணையை கடந்த 17ம் தேதி வெளியிட்டுள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் ‘‘நரிக்குறவன், குருவிக்காரன்’’ என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை ‘‘நரிக்குறவர், குருவிக்காரர்’’ என திருத்தம் வெளியிட கோரியுள்ளார்.
மேலும், இதற்கான பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போதைய நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதால், வரும் கல்வியாண்டிலேயே இப்பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக, காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, ஒன்றிய அரசு வெளியிட்டவாறே, தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு தனது திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது தமிழ்நாடு அரசும் அதனை திரும்ப வெளியிடும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
