×

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாடாளுமன்ற முடக்கத்தை தீர்க்க முடியும்: அமித் ஷா அழைப்பு

புதுடெல்லி: ‘எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண முடியும்’ என அமித்ஷா கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமீபத்திய லண்டன் பயணத்தின் போது, ‘இந்தியா ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது’ என அங்கு பேசினார். இதனால், அந்நிய மண்ணில் இந்தியாவை அவமதித்ததற்காக ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜ எம்பிக்களும், பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் அமளி செய்வதால் தொடர்ந்து 5 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடந்த ‘இந்தியா டுடே’ இதழின் மாநாட்டில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண முடியும். அவர்கள் இரண்டடி முன்னோக்கி வந்தால், அரசும் இரண்டு படி மேலேறி வரும்.

இரு தரப்பும் சபாநாயகர் முன்பாக அமர்ந்து விவாதிக்கட்டும். ஆளும் தரப்பை மட்டும் வைத்துக் கொண்டோ அல்லது எதிர்க்கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டே நாடாளுமன்றம் இயங்க முடியாது. எங்களுடைய முயற்சி இருந்தும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை. நாங்கள் யாரிடம் பேசுவோம்? அவர்கள் ஊடகங்களிடமே பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இல்லை என்கிறார்கள். முழுமையான பேச்சு சுதந்திரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இஷ்டத்திற்கு யாரும் எழுந்து பேசிவிட முடியாது. சாலையில் பேசுவது போல் நாடாளுமன்றத்தில் பேச முடியாது. இந்த அடிப்படை புரிதல் அவர்களிடம் இல்லையென்றால் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது? இந்த விதிமுறைகளை நாங்கள் வகுக்கவில்லை. நமது தாத்தா, பாட்டி காலத்தில் இருந்து இந்த விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படுகின்றன. அவைகளே இப்போதும் உள்ளன. அந்த விதிகளை பின்பற்றாமல் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.

நாட்டில் எமர்ஜென்சி விதிக்கப்பட்ட பிறகு இந்திரா காந்தி இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அப்போது ‘உங்கள் நாடு எப்படியிருக்கிறது?’ என அங்கு பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு இந்திரா காந்தி, ‘எங்களுக்குள் சில பிரச்னைகள் உள்ளன. அதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. நான் இங்கு ஒரு இந்தியனாக வந்துள்ளேன். என் நாடு நன்றாகவே செயல்படுகிறது’’ என்றார். ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த சமயத்தில் கூட ஐநாவில் காஷ்மீர் குறித்து பேச பாஜ தலைவர் வாஜ்பாய் தலைமையிலான குழுவை அனுப்பிய வரலாறுகள் உள்ளன. இந்த பாரம்பரியத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா மீது குற்றம் சுமத்துவது, மற்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் இந்தியா பற்றி விமர்சித்தது சரியா? இதற்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Parliament ,Amit Shah , Parliament deadlock can be resolved if opposition parties come to talks: Amit Shah calls
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...