புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான வரதட்சணை, பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பாக 1,98,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘தேசிய மகளிர் ஆணையத்திடம் கடந்த மூன்று ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான வரதட்சணை, பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி போன்ற புகார்கள் அதிகமாக வந்துள்ளன.
கடந்த 2022ல் 357 வரதட்சணை புகார்களும், 2021ல் 341 வரதட்சணை புகார்களும், 2020ல் 330 வரதட்சணை புகார்களும் வந்துள்ளன. கடந்த 2022ல் பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி தொடர்பாக 1,710 புகார்களும், 2021ல் 1,681 புகார்களும், 2020ல் 1,236 புகார்களும் வந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, 764 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 411 போஸ்கோ சிறப்பு நீதிமன்றங்கள் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுகின்றன; அவை 1,44,000க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து முடித்துள்ளன. இந்த நீதிமன்றங்களில் இன்னும் 1,98,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.