சென்னை: கோடை வெயில் தாக்கம் அதிரித்துள்ளதால் பழங்கள், பழரசம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிக அளவில் சுவைக்க தொடங்கியுள்ளனர். இதனால் நீர்ச்சத்து பழங்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆரஞ்சு பழங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. திராட்சை, மாதுளை பழங்களும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் வருகிறது.
ஆந்திராவில் இருந்து 15க்கும் மேற்பட்ட லாரிகளில் கிர்ணி பழங்களும் வருகிறது. மேலும், கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழங்கள் ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கோடை கால பழங்கள் வாங்க கோயம்பேட்டில் மக்களும், சிறு வியாபாரிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளன. எனவே, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.40 முதல் 60 வரையிலும், ஆரஞ்சு ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், திராட்சை ரூ.40 முதல் ரூ.50க்கும், தர்ப்பூசணி ரூ.15 முதல் 20க்கும், கிர்ணி பழம் ரூ.20 முதல் ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.