கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே மலையடிவார பகுதியில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் சாராய ரெய்டு செய்து 3000 லிட்டர் சாராய ஊறலை கொட்டி அழித்தனர். கச்சிராயபாளையம் காவல் எல்லையில் கல்பொடை, பரங்கிநத்தம், மல்லியம்பாடி, பொட்டியம் உள்ளிட்ட கல்வராயன்மலை அடிவார கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி மோகன்ராஜின் தனிப்படை போலீசார் ரெய்டு செய்து அழித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கல்படை மேற்கு ஓடைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கச்சிராயபாளையம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் விஜய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் கல்பொடை பகுதியில் திடீர் ரெய்டு செய்தனர். அப்போது கல்பொடை மேற்கு ஓடைப்பகுதியில் 200லிட்டர் ஊறல் பிடிக்கக்கூடிய 15 பேரல்களில் இருந்த 3000லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் இருந்த பேரல்களை மீண்டும் பயன்படுத்தாத வகையில் வெட்டி சேதப்படுத்தினர். மேலும் சாராய ஊறல் வைத்திருந்ததாக காரல் மார்க்ஸ் என்பவரை தேடி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.