நிலக்கோட்டை: சின்னாளபட்டியை அடுத்த வெள்ளோடு, செட்டியபட்டி பகுதிகளில் வெண்டைக்காய் அமோகமாக விளைந்துள்ளது. இதற்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சின்னாளபட்டியை அடுத்த வெள்ளோடு, செட்டியபட்டி, நடுப்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, முருகன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வெண்டக்காய், கத்தரி, மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகைள விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு காரணமாக மூன்று மாதத்தில் மகசூல் தரக்கூடிய வெண்டைக்காய் சாகுபடியை அதிகளவில் விவசாயிகள் ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.
இதன்படி இப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது வெண்டை செடிகளை பயிர் செய்துள்ளனர். தற்போது மழை மற்றும் பனிக்காலம் முடிந்து நல்ல வெயில் அடித்து வருகிறது. இது வெண்டை செடிகளில் அதிக காய்கள் உற்பத்திகான சரியான காலநிலையாக இருக்கிறது. இதன் காரணமாக சின்னாளப்பட்டியை அடுத்துள்ள செட்டியபட்டி பகுதியில் உள்ள தோட்டங்களில் வெண்டை அதிக அளவில் காய்த்துள்ளது. இதனால் சராசரியாக ஏக்கருக்கு 90 முதல் 120 கிலோ வரை வெண்டைக்காய் கிடைக்கின்றது. மேலும் சந்தையிலும் சராசரியாக ரூ.40 முதல் 50 வரை அவற்றுக்கு விலை கிடைக்கின்றது. இனிவரும் பங்குனி, சித்திரை மாதங்கள் கிராம திருவிழா காலம் என்பதால் விலைகுறைய வாய்பில்லை. எனவே சரியான நேரத்தில் விளைந்துள்ள வெண்டைக்காயால் வழக்கத்தை விட அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.