×

சென்னை கொத்தவால்சாவடியில் புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்..!!

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் புதிய நியாயவிலைக் கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். இன்று  காலை 9.00 மணியளவில் சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாயவிலைக் கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி துவக்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரியகருப்பன், தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மக்களுக்கு முக்கிய சேவைகள் அளித்து வருகின்றது. குறிப்பாக, அரசின் சார்பில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தரமாகவும், தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 நியாயவிலைக்கடைகள் சொந்த கட்டடங்களிலும், 24,179 நியாயவிலைக்கடைகள் வாடகை இன்றி பொது கட்டடங்களிலும், 7,952 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

இதில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான நியாயவிலைக்கடை ரூ.12,000 வீதம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்துள்ள நிலையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் முயற்சியாலும், பொதுமக்களின் ஒத்துழைப்போடு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் வாடகை அடிப்டையில் புதிய நியாயவிலைக் கடை இன்று தொடங்கப்பட்டது.

மேலும், நியாயவிலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்குவதற்கும், பொதுமக்கள் காத்திருக்காமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி மினி சூப்பர் மார்க்கெட் மூலம் தேவையான அனைத்து பொருட்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6500 காலிபணியிடங்கள் நிரப்புவதற்கு நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தார்.  

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திரு.அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) திரு.அ.சங்கர், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags : Cooperatives Minister ,Periyakaruppan ,Kothawalchavadi ,Chennai , New Fair Price Shop, Minister Periyakaruppan, Chennai
× RELATED முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை