×

ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் தமிழக அரசு பதில்தர அவகாசம் தந்து 27ம் தேதிக்கு விசாரணை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இதனை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி  நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தபோது, ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று கூறியது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை என்றும் பிரச்னைகள் உள்ள இடங்களில் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது.

பின்னர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை  தமிழ்நாடு அரசு நாடியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 10 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை இருந்ததால் ஆர்.எஸ்.எஸ்.வழக்கு பற்றி ஆலோசிக்க முடியவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 27 க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : Supreme Court ,RSS rally , Supreme Court postpones RSS rally to March 27
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...