×

சென்னையில் பத்மாவதி தாயார் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் கண் குளிர சாமி தரிசனம்!!!

சென்னை: தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்பதியில் பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் இருப்பதை போன்று, சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது.  இதற்காக பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை கட்ட திட்டமிடபட்டது. சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில், 2021 பிப்ரவரி 13ம் தேதி கோயில் கட்டுமான பணிகள் தொடங்கி, தற்போது முடிந்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 7.30 மணி அளவில் நடைபெற்றது. இதையொட்டி, 3 நாட்கள் பத்மாவதி தாயார் நெல் தானியத்திலும், தண்ணீரிலும் 2000 லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று காலையில் தாயாரை கோயில் கருவறைக்கு கொண்டு சென்று அங்கு பிரதிர்ஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை சதுஸ்தனா அர்ச்சனா, 8 மணி முதல் 9 மணி வரை மூர்த்தி ஹோமமும், இரவு 9 முதல் 9.30 மணி வரை தாயாருக்கு அஸ்த பந்தன மூல விக்கிரக பிரதிர்ஷ்டை மகாத்சயம் நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்பதி கோயிலினின்  ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன.

தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு நடந்தது. காலை  5 மணி முதல் 6 மணி வரை மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹுதி, 6 மணி முதல் 6.30 மணி வரை கும்ப உத்தப்பனமும், காலை 7 மணி முதல் 7.15 மணிவரை ஆலய பிரதக்ஷனா, 7.15 முதல் 7.30 மணி வரை சம்பாத்ஜய சபர்ஷனம், 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் மீன லக்கணத்தில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

விமான கோபுரத்திலும் ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.காலை 10 மணி முதல் 11 மணி வரை பாணி கிரகணம் (பத்மாவதி சீனிவாசா கல்யாணம்) 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.ஒய்.சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள்,ஸ்ரீசுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் மற்றும் ஆன்மீகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் தெரிவித்துள்ளார். பத்மாவதி தாயார் கோவிலுக்கு வரும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது.  கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு ஜி.என்.செட்டி ரோடு வலது புறமாக சென்று வடக்கு போக் சாலை, விஜயராகவாச்சாரியார் சாலை, டாக்டர் நாயர் ரோடு வழியாக சென்று மீண்டும் திருமாட வீதியை அடைகிறது.


Tags : Padmaavati Mother ,in ,Chennai Festival Sevangeli ,Sami , Chennai, Padmavati, Mother, Temple, Kudamukku
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்