வாஷிங்டன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நியமித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடந்த வெளியுறவு குழு கூட்டத்தில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்தது. அப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை இந்தியாவுக்கான தூதராக வெள்ளை மாளிகையின் வெளியுறவுக் குழு பரிந்துரைத்தது. இவரது பெயரை அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்தார். அப்போது நடந்த வாக்கெடுப்பின் போது மொத்தம் 52 வாக்குகள் பதிவாகின.
இதில் எரிக் கார்செட்டிக்கு ஆதரவாக 42 வாக்குகள் பதிவாகின. அதனால் எரிக் கார்செட்டியை இந்தியாவுக்கான தூதராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இவர், அதிபர் ஜோ பைடனின் தேர்தல் பிரசார குழுவின் இணைத் தலைவராக இருந்தார். கடந்த 2021 ஜனவரி முதல் இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கான தனது நிரந்தர தூதரை அமெரிக்கா நியமித்துள்ளது.
* இந்தியா வரவேற்பு
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனத்தை இந்திய வெளியுறவுத்துறை வரவேற்று உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்,’இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி உறுதி செய்யப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். பன்முக இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளிக்கு விமானப்படை பதவி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை விமானப்படையின் துணை செயலாளராக அமெரிக்க செனட் சபை நியமனம் செய்துள்ளது. இந்த பதவியானது, பென்டகனின் உயர்மட்ட சிவிலியன் தலைமை பதவிகளில் ஒன்றாகும். புதியதாக நியமனம் செய்யப்பட்ட ரவி சவுத்ரி, அமெரிக்க போக்குவரத்துத் துறையில் மூத்த நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்.
பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) வணிக விண்வெளி அலுவலகத்தின் திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் இயக்குநராக பணியாற்றி உள்ளார். செனட் சபையில் நடந்த ஓட்டுபதிவில் ரவி சவுத்திரிக்கு ஆதரவாக 65 வாக்குகளும் எதிராக 29 வாக்குகளும் பதிவானது. இவர் 1993ல் இருந்து 2015 வரை அமெரிக்க விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.