புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.70,584 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில், ரூ.70,584 கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம், 2022-23ம் நிதியாண்டில் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கான செலவு ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 538 கோடியாக உள்ளது.
இதில், 98.9 சதவீதம் இந்திய நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களை வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், ‘’உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்பட்ட தளவாடங்களை கொள்முதல் செய்வதன் மூலம் இந்திய நிறுவனங்கள் தற்சார்பு இந்தியா திட்ட இலக்கை அடைய முடியும். மேலும், தளவாடங்கள் இறக்குமதியில் வெளிநாடுகளை பெருமளவில் நம்பி இருக்கும் தேவையும் குறையும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.