புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறையின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் குழு முடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரி கூறுகையில்,‘‘ரஷ்யாவை சேர்ந்த பீனிக்ஸ் என்ற ஹேக்கர்கள் குழுவை சேர்ந்தவர்கள் ஒன்றிய சுகாதார துறையின் இணையதள பக்கத்தை முடக்க முயற்சித்துள்ளனர். மேலும் , அதில் இருந்த நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகள்,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இந்திய கணினி அவசர நிலை மீட்பு குழுவிடம் (சிஇஆர்டி) கேட்கப்பட்டுள்ளது’’ என்றார். கிளவுட்செக் என்ற சைபர் பாதுகாப்பு நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய எண்ணெய்க்கு குறைவான விலை நிர்ணயித்ததை கண்டித்து ஹேக்கர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.