சென்னை: ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையில் முடிந்துள்ளது. இந்த வன்முறையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து திருச்சியில் உள்ள நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலுக்கு மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் பெண் காவலர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறையில் காவல் துறையில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. தவறிழைத்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையை பெற்றுத் தரவும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.