கோவை: கோவையில் விபரீத விளையாட்டால் வாலிபர் பரிதாபமாக இறந்தார். கோவை அவினாசி ரோடு ஆர்.ஜி.புதூர் பகுதியில் உள்ள ஒரு மில்லில் பீகார் மாநிலம் நாலந்தா பகுதியை சேர்ந்த சோனுகுமார் (27) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தார். அப்போது இவருடன் வேலை செய்து வந்த தர்மேந்திர குமார் (27) என்பவர் கம்ப்ரசர் ஏர் மூலமாக உடல் மற்றும் ஆடையில் ஒட்டி கொண்டிருந்த பஞ்சு துகள்களை அகற்றி கொண்டிருந்தார். சோனுகுமாரும் பிரசர் ஏர் மூலமாக பஞ்சு கழிவுகளைஅகற்றுமாறு கூறவே அவருக்கும் ஏர் பிரசர் மூலமாக கழிவுகளை அகற்றிவிட்டார். அப்போது விளையாட்டாக சோனுகுமாரின் ஆசன வாயில் கம்ப்ரசர் பிரசர் வைத்து காற்றை செலுத்தியுள்ளார். இதில் வயிற்றில் அடைப்பு ஏற்பட்டதால் சோனுகுமார் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோனுகுமார் இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து, தர்மேந்திரகுமாரை கைது செய்தனர்.