தஞ்சாவூர்: பிரதமருக்கு அவதூறான இ-மெயில் பதிவு அனுப்பிய தஞ்சாவூர் பிஎச்டி மாணவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). இவர், தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எச்டி படித்து வருகிறார். இவர், பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறான கருத்துகளை பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த டெல்லியில் இருந்து 9 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு பூண்டி கிராமத்துக்கு வந்தனர்.
அங்கு வீட்டில் இருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் அவரை தஞ்சாவூரில் உள்ள ஒன்றிய கல்வி நிலையத்துக்கு சொந்தமான இடத்துக்கு அழைத்து சென்று தனி அறையில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் விசாரணையை தொடர்ந்தனர். பிரதமர் அலுவலகத்துக்கு எதற்கு மெயில் அனுப்பினார், இதற்கு வேறு யாரின் தூண்டுதல் உண்டா, வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.