நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அனில்குமார் தலைமையில் இன்று காலை, நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் இருந்தனர். அப்போது மினி டேங்கர் லாரி வந்தது. சந்தேகத்தின் பேரில் வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்தனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அதிகாரிகள் அந்த வாகனத்தை துரத்தினர். சுமார் 5 கி.மீ. தூரம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தனர்.
அதிகாரிகள் நெருங்கி வருவதை பார்த்த டிரைவர், பார்வதிபுரம் கடந்ததும் அந்த வாகனத்தை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு தப்பினார். இதையடுத்து அந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் சாக்கு மூடைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாகனம் மற்றும் ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தற்போது வாகன பதிவு எண் மூலம் விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட கடத்தல் வாகனம் தாசில்தார் அலுவலக வளாகத்திலும், ரேஷன் அரிசி மூடைகள் கோணத்திலும் வைக்கப்பட்டுள்ளன.