ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகள் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக உள்ள சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளில் பாரம் ஏற்றிக் கொண்டு வரப்படும் கரும்புகள் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் அமைக்கப்பட்டுள்ள உயரத்தடுப்பு கம்பியில் உரசி கரும்புத் துண்டுகள் கீழே சிதறி விழுகின்றன.
இந்த கரும்புத் துண்டுகளை தின்பதற்காக இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் சோதனை சாவடி பகுதியில் உள்ள சாலையில் முகாமிட்டன. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையில் நிறுத்தினர். அப்போது வனத்துறை ஊழியர் காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தபோது யானைகள் கரும்பு திண்டுகளை தின்பதற்காக சாலையை விட்டு நகராமல் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.