×

ஜெட் வேகத்தில் தங்கம் விலை...ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.43,400க்கு விற்பனை; பவுன் ரூ.44 ஆயிரத்தை கடந்து விடுமோ?

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சில வாரம் திடீரென்று உயர்வதும், அதன் பிறகு விலை குறைவதுமாகவும் இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,270க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது.

திங்கட்கிழமை ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்கப்பட்டது. செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. இதனிடையே நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,425க்கும், சவரனுக்கு ரூ.460 உயர்ந்து, ரூ.43,400க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.72.70க்கு விற்கப்படுகிறது.

இப்படியே தங்கம் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்து கொண்டே சென்றால் வரும் நாட்களில் தங்கம் விலை பவுன் ரூ.44 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சம் நகை வாங்குவோரிடையே நிலவி வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதுமே தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.


Tags : Gold, Price, Sawaran, Sale
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...