சென்னை: விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலிகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று, ஆனைமலை மற்றும் முதுமலை யானை காப்பகங்களில் பனியாற்றும் 10 யானை பராமரிப்பாளர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய்கான காசோலையை வழங்கும் அடையளமாக 10 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்வில் வனத்துறை தலைமை செயலர் சுப்ரியா சாகு, வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி மற்றும் வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: கோடை காலங்களில் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்கும் விதமாக சட்ட விரோதமாக மின்வேலிகள் அமைக்கப்படுகிறது. அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சத்திய மங்கலம், கொடைக்கானல் பகுதியில் பரவி வரும் காட்டு தீயை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.