சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூரில் மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் சிக்கியது என்ன என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளி வந்துள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், ஆதார் பிரிவு, நிலஅளவைப் பிரிவு, கணக்கு பிரிவு, வரி செலுத்தக்கூடிய பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒவ்வொரு பிரிவிலும் சோதனை நடத்தினர். அங்கிருந்த பணத்தை பெற்று கணக்கில் வருகிறதா, கணக்கில் வராத பணம் குறித்து விசாரித்தனர்.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்திலும் 5க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைத்து பிரிவுகளிலும் சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் பெரு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கு, கட்டிட வரைபடம் அனுமதி வழங்கும் பிரிவில் அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் பெறுவதாக எழுந்த தொடர் புகார் காரணமாக திடீர் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை அடுத்த அய்யங்கார்குளத்தில் வீடுகட்ட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசின் திடீர் சோதனை காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மத்தியிலும் பெரும் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை முழுமையாக முடிந்த பிறகுதான் முக்கிய ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் கிடைக்கும். திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலமாக மாவட்டத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி வீடு கட்டாதவர்களுக்கு கட்டியது போல் கணக்கு காட்டுவது, ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு குறைத்து வருமான கணக்கு காட்டுவது, வீடு, நிலம் என வசதி படைத்தவர்களுக்கும் வீடு இல்லை, நிலம் இல்லை என விண்ணப்பத்தில் தெரிவித்து பயனாளிகள் தேர்வில் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நாராயணன் உள்பட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணியை கடந்தும் நீடித்தது. இதில், கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். மேலும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகம், ஊத்துக்கோட்டை சோதனை சாவடி உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு வாரத்திற்கு முன் திருவள்ளூர் துணை கலெக்டரும், டாஸ்மாக் மாவட்ட மேலாளருமான கலைமன்னன் டாஸ்மாக் பார் உரிமத்தை புதுப்பிக்க ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும், களவுமாக பிடிபட்டார். ஆவடி: ஆவடியில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 5 அதிகாரிகள் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத, ரூ. 2,06,800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், பட்டாபிராம், மாடர்ன் சிட்டியில், உள்ள ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஜாய் தயாள் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் மதியம் 3 முதல் 5 மணி நேரத்திற்கு மேலாக மணி சோதனை நடத்தினர்.