சென்னை: சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவர் முருகன் (32), கொத்தனார். கடந்த 2015ல் இவருடன் கட்டிட வேலை செய்துவரும் பெண் சித்தாளின் வீட்டுக்கு உணவு கேட்டு வந்துள்ளார். அந்த பெண்ணின் 5 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவளை முருகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டு வந்த சிறுமியின் தாய் வீடு பூட்டியிருப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார். உள்ளே சிறுமி மயங்கிய நிலையில் இருந்ததால் முருகன் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி மயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது அங்கிருந்து முருகன் தப்பி ஓடிவிட்டார். உடனே, சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தாய் எம்.கே.பி நகர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் மகளிர் போலீசார் முருகனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. சிறுமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்குமாறும் நீதிபதி பரிந்துரை செய்தார்.