சென்னை: பிரதான குழாயை இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட 7 பகுதிகளுக்கு 18ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 700 மில்லி மீட்டர் விட்டமுள்ள உந்து குழாயுடன் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள 1500 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான குழாயை இணைக்கும் பணிகள் நடக்க இருக்கிறது.
இதனால், வரும் 18ம்தேதி காலை 6 மணி முதல் 19ம்தேதி காலை 6 மணி வரை பகுதி-7 (அம்பத்தூர்), பகுதி-8 (அண்ணாநகர்), பகுதி-9 (தேனாம்பேட்டை), பகுதி-10 (கோடம்பாக்கம்), பகுதி-11 (வளசரவாக்கம்), பகுதி-12 (ஆலந்தூர்) மற்றும் பகுதி-13 (அடையாறு) ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் < https://che**aimetrowater.t*.gov.i* என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
