×

கோடைக்கு முன்பே சுட்டெரிக்கிறது; ‘சுள்’ வெயிலை சமாளிக்க ‘ஜில்’ தண்ணீருக்கு மண்பானைகள் தயாரிப்பு: மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் பிஸி

மானாமதுரை: கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில், மானாமதுரையில் மண்பானைகள், கூஜா வகைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்ட கலைப் பொருள்களுக்கு பெயர் பெற்றது. நம்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம் மானாமதுரை பகுதி கண்மாய்களில் கிடைக்கும் 7 வகையான மண்ணின் தனித்தன்மை தான். மானாமதுரை நகரில் குலாலர் தெரு, உடைகுளம், கீழப்பசலை, சன்னதிபுதுக்குளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பது பிரதான தொழிலாக உள்ளது.

இங்கு சீசனுக்கு தகுந்தவாறு விநாயகர் சிலைகள், அக்னிச் சட்டிகள், கார்த்திகை விளக்குகள், வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப்பொருள்கள், விதவிதமான அடுப்பு வகைகள், பூந்தொட்டிகள், சமையல் சட்டிகள், மண்பானைகள், கூஜாக்கள் என பல வகையான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. கோடைகாலம் தொடங்கியதும் இப்பகுதிகளில் மண்பானை தயாரிப்பு தீவிரமடையும். தற்போது நவீன காலத்துக்கு ஏற்ப மண்பானைகள் பல டிசைன்களில் தயாரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் தயாராகும் மண் கூஜாக்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் குடிநீரை விட மண்பானைகளில் சேமித்து வைத்துள்ள குடிநீர் ஆரோக்கியமானது.

மண்பானையில் உள்ள குடிநீர் மண்வாசனையுடன், ஒருவித தனிச்சுவையுடன் தொண்டையை குளிரச் செய்து புத்துணர்ச்சி ஏற்படுவதை உணர முடியும். இதனால் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் மண்பானை தண்ணீரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் மண் பானைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமும் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் கொடுத்தும் மண்பானைகளை விற்று வருகின்றனர். திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மானாமதுரைக்கு வந்து தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுத்து மண்பானைகள், கூஜாக்களை வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது மானாமதுரையில் மண்பானை மற்றும் கூஜாக்கள் ரூ.80லிருந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கோடைகாலத்தில் சாதாரண தண்ணீரும் சுடுநீர் போல இருக்கும். கோடை வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் குளிர்ந்த நீரை அருந்த விரும்புவது வழக்கம். மண்பானையில் வைக்கப்படும் குடிநீர் அளவான குளிரில் இருக்கும். இதனை அருந்துவதால் ஜலதோசம், காய்ச்சல் வராது. எனவே குழந்தைகளுக்கும் மண்பானையில் வைத்த குடிநீரை அருந்த தரலாம். தற்போது கண்மாய்களில் மண் எடுக்க தடை, டீசல் விலை உயர்வு, வாகன வாடகை உயர்வு, தேங்காய்மட்டை, விறகு என உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்தாலும் கடந்த ஆண்டு விற்ற விலைக்கே வழங்குகிறோம்’’ என்றனர்.

Tags : Manamadura , Burns before summer; Preparation of earthen pots for 'jill' water to cope with 'sul' heat: Pottery workers busy in Manamadurai
× RELATED உழவர்சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை