ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 15: ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில், 5 பேர் படுகாயமடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் கூட்டு சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. அப்போது, ஆட்டோ அரக்கோணம் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த காரின் மீதும், காரின் பின்னே வந்த மினி லோடு வேன் காரில் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதனால், அடுத்தடுத்து 4 வாகனங்கள், தொடர்ந்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் பிரகாஷ் மற்றும் காரில் வந்த 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த ஸ்ரீபெரும்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதால், அரக்கோணம் - சென்னை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.