சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தாய்ப் பாலுக்கு நிகராக ஆவின் பால், பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாக இருந்தது என்ற பாராட்டை தமிழக தாய்மார்களிடமிருந்து பெற்றது. தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஆவின் பால் நிறுவனமும், பால் கூட்டுறவு சங்கங்களும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மூன்று வகையான தரமான பாலை வழங்கி வந்தது.
அதே நேரத்தில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து உடனுக்குடன் அவர்கள் வழங்கிய பாலுக்கான விலையைக் கொடுத்து வந்தது. இதனால் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்குத் தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல், தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் நிறுவனத்துடன் போட்டிபோட்டு குறைந்த விலைக்கு தரமான விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்தன.
பாலை தமிழகம் முழுவதும், குறிப்பாக தலைநகர் சென்னை மாநகர மக்களில் 99 சதவீதத்தினர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். ஆனால், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பால் சப்ளை அடியோடு சீர்குலைந்து போயுள்ளதால், மக்கள் அநியாய விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உடனடியாக பால் கொள்முதலை அதிகரித்து, அனைத்து மாவட்ட பால் உற்பத்தி நிறுவனங்களையும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தது போல் மீண்டும் சிறப்பாக செயல்படத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பால் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். உடனடியாக தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை மேம்படுத்த இந்த தமிழக அரசை வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.