வந்தவாசி : வந்தவாசி அடுத்த பாஞ்சரை ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை அகற்ற அலுவலர்கள் திட்டமிட்டால் மிரட்டும் ஆக்கிரமிப்பாளர்களால் பலமுறை திரும்பி செல்கின்றனர்.வந்தவாசி அடுத்த பாஞ்சரை கிராமத்தில் தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்கிறது. இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. பல்லவன் நகர் வழியாக கிராமத்திற்கு உள்ளே செல்லும் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக கிளை செயலாளர் செல்வம் சுமார் 150க்கு அதிகமான டிராக்டர் மூலம் மண்களை கொட்டி சிறிய அளவில் மாட்டு கொட்டகை ஏற்படுத்திய இவர் தற்போது தகர சீட்டாளான நிரந்தர மாட்டு கொட்டகையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர், வந்தவாசி தாசில்தார் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்ற தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் பலமுறை திட்டமிட்டு அதற்கான கடிதத்தினை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் வழங்கியும் தாசில்தார் தெள்ளார் காவல்துறைக்கு தெரிவித்தும் ஆக்கிரமிப்பு அகற்ற செல்லும் பொழுது ஆக்கிரமிப்பு செய்துள்ள செல்வம் உள்ளிட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் தீக்குளிப்போம் என மிரட்டுவதால் பலமுறை திரும்பி வந்துள்ளனர்.
கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி திட்டமிட்டு ஆக்கிரமிப்பு அகற்ற சென்றனர். வழக்கம்போல் ஆக்கிரமிப்பாளர் செல்வம் வழக்கம்போல் தீக்குளித்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் செய்வதறியாமல் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, வருவாய் ஆய்வாளர், காவல்துறையினர் திரும்பி உள்ளனர்.
ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக அகற்ற செல்லும் அலுவலர்களை தற்கொலை செய்து விடுவதாக மிரட்டி தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தினை காப்பாற்றி வருவதால் நீர் பிடிப்பு வெகுவாக குறைந்துள்ளது தொடர்ந்து விவசாயம் செய்ய இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.