×

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல்

விழுப்புரம்: குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன் சீல் வைத்தார். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள இரு அறைகளும் சீல் வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திருப்பூரைச் சேர்ந்த ஜபஹருல்லா என்பவரை சந்திக்கச் சென்ற உறவினர்களிடம் ஆசிரமத்தில் இருந்த ஜவஹருல்லா காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜபஹருல்லா உறவினர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் (Habeas corpus) செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரமம் முறைகேடாக அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. மேலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்றோர்களை குரங்குகளை வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. அதே போன்று, ஆசிரமத்தில் தங்கியிருந்த 15-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி ஆஸ்ரமம் நடத்தி வந்தது, ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆஸ்ரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியது, ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்ரம பணியாளர்களை கைது செய்தனர்.

இதனை அடுத்து ஆசிரமத்தில் இருந்த அனைவரையும் மீட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி நடத்தப்பட்ட அந்த ஆசிரமத்தை சீல் வைக்க உத்தரவிட்டார். குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன் சீல் வைத்தார்.



Tags : Anbujothi Azram ,Viluppuram , Villupuram, Anbujyothi Ashram, District Collector, Presiding, Seal
× RELATED விழுப்புரம் அருகே லாரி கவிந்து...