திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடத்தை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார். திருக்கழுக்குன்றம் மலையடிவாரம் அருகில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பாவேந்தர் பாரதிதாசன் நூலகம், இயங்கி வருகிறது. இந்த நூலக கட்டிடம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. இந்த பழமையான கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டித் தரவேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாசகர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய நூலக கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, பேரூராட்சி கவுன்சிலர் பூங்கொடி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ (பொ) சிராஜ் பாபு, மாவட்ட நூலகர் மந்திரம், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், பேரூராட்சி துணை தலைவர் அருள்மணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, திமுக நிர்வாகிகள் விஜயன், கோபால், சுகுமாரன், செங்குட்டுவன், சரவணன் மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள் பரந்தாமன், அரிதினேஷ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.