×

உதவிகளை பெற்றுக்கொண்டு இந்திய மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் கைது செய்து, அங்கு சிறையில் அடைக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மற்றும் அவரது படகுகள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இலங்கை அரசு தனது கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, இந்திய நாட்டின் உதவியை நாடுகின்றது. இந்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசும் பெரும் உதவியை செய்தது, தொடர்ந்து செய்தும் வருகின்றன. உதவிகளை பெற்றுக் கொள்கிற இலங்கை அரசு, இந்திய மீனவர்களை இரக்கமற்ற முறையில் கொடுமைப்படுத்தி வருவதை நிறுத்தவில்லை என்பது நல்லெண்ணத்தை வலுப்படுத்த உதவாது.

பாஜ ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என பிரதமர் மோடி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இனியாகிலும் நிறைவேற்றப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களது படகுகளை சேதாரமின்றி ஒப்படைக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



Tags : Sri Lanka ,Mutharasan , Sri Lanka Jails Indian Fishermen for Receiving Aid: Mutharasan Condemns
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...