சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நேற்று முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெற உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் 26 வகையான 2022-23ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நேற்று தொடர் ஜோதியினை ஏற்றி வைத்து போட்டியினை தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பினைப் பார்வையிட்டார்.
மேலும் தடகளப் போட்டியினை தொடங்கி வைத்து, விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற்றிடவேண்டும், தமிழ்நாடு மாணவர்கள், இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் நம்பிக்கையில் முழு முயற்சி எடுத்து வருகின்றனர். முதலமைச்சரின் சிறந்த தொடர் நடவடிக்கையினால் உலகே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னை மகளிர் ஓப்பன் டென்னிஸ் ஆகியவை சென்னையில் நடத்தப்பட்டது. தற்போது நடைபெற்ற விளையாட்டு பயிற்சியாளர்கள் தேர்வில் தகுதியின் அடிப்படையில் 76 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு, தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெறுகின்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்குதல் போன்ற அனைத்து திட்டங்களையும் உறுதி செய்து நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அகில இந்திய அளவில் 82 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த 1,900 தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டி நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக 890 பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்களும் வந்துள்ளனர். இந்தப் போட்டிகள் நடைபெறும் இந்த விளையாட்டு பல்கலைக்கழகமானது அனைத்து விளையாட்டு பயிற்சி வசதிகளும் கொண்ட ஆசிய அளவில் சிறந்த முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் என்றார்.