கொல்கத்தா: வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி சமதா கட்சி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் அரசு அதிகாரிகள் தமிழகம் வந்து தங்களது மாநில தொழிலாளர்களை சந்தித்து ஆய்வு நடத்தினர்.
அவர்கள் தாக்கப்படவில்லை என்பதும் ஹோலி பண்டிகைக்காக ஊருக்கு சென்றுள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இங்கு நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டனர். போலி வீடியோக்களை வெளியிட்டதாக, பரப்பியதாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலி வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமதா கட்சியின் பொது செயலாளர் என்.ஏ. கோன் வலியுறுத்தி உள்ளார்.