குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று தொடர்வதால், இன்று காலை விசைபடகுகள், வள்ளங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்று விட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.
தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் இன்று காலை பலத்த காற்று காரணமாக பைபர் கட்டுமரங்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.