×

ஆவடி அருகே வீட்டை திறந்து 16 சவரன் நகைகள் கொள்ளை

ஆவடி: ஆவடி அருகே தவறவிட்ட சாவி மூலம் கதவை திறந்து, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர். ஆவடி அருகே கொள்ளுமேடு, கே.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (29). இவர், திருமுல்லைவாயலில் ஒரு தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சேட்டு (55), அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். இதற்கிடையே கடந்த 11ம் தேதி தனது மனைவி, கைக்குழந்தை மற்றும் தாயாருடன் வீடு மற்றும் முன்பக்க கேட்டை பூட்டிவிட்டு ஏழுமலை திருப்பதிக்கு கிளம்பி சென்றுள்ளார். இவரது தந்தை சேட்டு வேலை காரணமாக, அவர்களுடன் திருப்பதிக்கு செல்லவில்லை. இந்த வீட்டுக்கு 3 சாவிகள் தயாரித்து, அதை ஏழுமலை, அவரது தந்தை மற்றும் தாய் வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு திருப்பதியில் இருந்து தனது குடும்பத்துடன் ஏழுமலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியானார். அதே சமயம் அவரது தந்தை சேட்டுவும் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவரிடம் ஏழுமலை கேட்டதற்கு, நான் இப்போதுதான் வேலை முடிந்து வீடு திரும்புகிறேன் என்று தந்தை கூறியுள்ளார். பின்னர் அனைவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த துணிமணி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.

மேலும், பீரோ லாக்கரை உடைத்து, அதில் இருந்த 16 சவரன் நகைகளை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அதே சமயம், படிக்கட்டின் கீழே ஏற்கெனவே தாயார் தவறவிட்டிருந்த மாற்று சாவியையும் தந்தை சேட்டு தேடி கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். இதனால் தாயார் தவறவிட்ட மாற்று சாவி மூலம் மர்ம நபர்கள் நோட்டமிட்டு, வீட்டின் கதவு மற்றும் முன்புற கேட்டை திறந்து, வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது ஏழுமலைக்கு தெரியவந்தது. இப்புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Sawaran ,Avadi , 16 Sawaran jewels were stolen from a house near Avadi
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!